அரியலூரில், மதுபோதையில் மினிவேனுக்கு அடியில் படுத்துறங்கிய அரசுப் பேருந்து ஓட்டுநர், வேன் திடீரென இயக்கப்பட்டதால் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அரியலூர் கே.கே.நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் கேசன் மகன் சுந்தரவேல் (52). அரசுப் பேருந்து ஓட்டுநர். மது அருந்தும் பழக்கம் உள்ள இவர், செவ்வாய்க்கிழமை இரவு கே.கே.நகர் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு மினிவேனுக்கு அடியில் மது போதையில் படுத்து உறங்கினாராம்.
இந்நிலையில் இதனையறியாத அந்த வேனின் ஓட்டுநர், புதன்கிழமை காலை வேனை ஓட்டிச் சென்றுள்ளார். இதில் காருக்கு அடியில் இருந்த சுந்தரவேல் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அரியலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.