தவறான சிகிச்சை: பெண் அரசு மருத்துவருக்கு ரூ. 10 லட்சம் அபராதம்

அரியலூரில், தனியார் மருத்துவமனையில் பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்த வழக்கில் பெண் அரசு மருத்துவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து

அரியலூரில், தனியார் மருத்துவமனையில் பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்த வழக்கில் பெண் அரசு மருத்துவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து அரியலூர் நுகர்வோர் குறை தீர்வு மன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
அரியலூர் கே.கே.நகரைச் சேர்ந்தவர் செந்தில்வேல். இவரது மனைவி பெருமாள் தாய் (35). கடந்த 2009 ஆம் ஆண்டு இவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டின் அருகே தனியார் மருத்துவனை நடத்தி வரும் அரசு மருத்துவர் ஆர்.கே. காஞ்சனாவை சந்தித்து சிகிச்சை பெற்றார். இருப்பினும் தொடர் ரத்தப்போக்கு மற்றும் வயிற்றுவலி இருந்ததால் காஞ்சனா வயிற்றில் கரு சரியாக தரிக்கவில்லை உடனடியாக கருவை கலைக்க வேண்டும் என்று கூறி அறுவைச் சிகிச்சை செய்துள்ளார்.
ஆனால் அதன் பிறகும் வயிற்றுவலி குறையாததால் பெருமாள்தாயின் தந்தை, அவரை ஆபத்தான நிலையில் திருநெல்வேலியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், பெருமாள்தாய்க்கு தவறான அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்டு கரு கலைக்கப்பட்டுள்ளது என்றும், ஆபத்தான நிலையில் இருப்பதால் வயிற்றில் உள்ள ஒரு குழாயை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பெருமாள்தாயின் கணவர் செந்தில்வேல், மருத்துவர் காஞ்சனாவை சந்தித்து, தனது மனைவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளின் அறிக்கைகளை  கேட்டுள்ளார். அதற்கு அவர் திருச்சியிலுள்ள ஒரு தனியார் பரிசோதனை மையத்துக்கு ஆய்வுக்காக அனுப்பட்ட அறிக்கைகள் இன்னும் வரவில்லை என கூறி பல நாட்களாக இழுத்தடித்துள்ளார்.
இதுகுறித்து செந்தில்வேல், மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு மன்றத்தில் கடந்த 16.11.2011 அன்று மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர்வு மன்றத் தலைவர் ஜெயசந்திரன், தவறான  சிகிச்சையளித்த மருத்துவர் காஞ்சனா, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 10 லட்சமும், வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து தொகை செலுத்தும் தேதி வரை 9 சதவீத வட்டியுடன் சேர்ந்து நஷ்ட ஈடு வழங்குமாறு வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில், ஒரு அரசு மருத்துவர், தனியாக மருத்துவமனை நடத்தி வருவதை கண்காணிக்காத பெரம்பலூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் குடும்ப நல இணை இயக்குநரகம், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் செந்தில்வேலுக்கு ரூ. 1 லட்சமும், வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து தொகை செலுத்தும் தேதி வரை 9 சதவீத வட்டியுடன் சேர்த்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என  நுகர்வோர் குறைதீர் மன்றத் தலைவர் ஜெயந்திரன் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com