டெங்குவைத் தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றார் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி.
அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டத்தில் உள்ள பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவமனை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பங்கேற்று மருத்துவமனையைத் திறந்து வைத்து மேலும் பேசியது:
தமிழ்நாட்டில் தற்போது நிலவேம்புக் கசாயமும், பப்பாளி இலையுமே மக்களைக் காப்பாற்றி வருகிறதே தவிர, டெங்குவைத் தடுக்க அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை. டெங்கு மட்டுமன்றி, மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் நிறைய உள்ளன. அவற்றைத் தீர்க்கும் மனப்பான்மை தமிழக அரசிடம் இல்லாதது வருத்தத்துக்குரியது. அனைத்து சாதியினரும் கோயிலில் அர்ச்சகராக வேண்டும் என்று தந்தை பெரியார் கேட்டு திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.
தமிழகத்தில் பயிற்சிபெற்ற அர்ச்சகர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர், அவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும்.
நீட் தேர்வை எதிர்த்து, திராவிடர் கழகம் அதனுடன் ஒத்த கருத்துடைய மற்ற கட்சிகளுடன் இணைந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம் என்றார்.
நிகழ்ச்சியில், பெரியார் கல்விக் குழுமத் தலைவர் அன்புமணி, மருத்துவ குழும இயக்குநர் கவுதமன், திராவிடர் கழக மண்டல தலைவர் காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக ரூ. 5 லட்சம் நன்கொடையை விருத்தாசலம் நகைக்கடை அதிபர் அகர்சந்த் கி.வீரமணியிடம் வழங்கினார்.