அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே தம்பியை அடித்துக் கொன்றவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருமானூர் அருகேயுள்ள மேலப்பழுவூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி (54). இவரது மகள் கடந்தாண்டு உறவினர் மகனுடன் சென்று திருமணம் செய்து கொண்டார். இதனால், கருணாநிதி உடன் பிறந்த 4 பேரும் அவருடன் பேச்சுவார்த்தையின்றி இருந்தனர்.
இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி கருணாநிதி தனது மகளுக்கு வளைகாப்பு நடத்தி தனது வீட்டுக்கு கூட்டி வந்துள்ளார். அப்போது, இவ்வளவு நாளாக பேசாமல் இருந்துவிட்டு தற்போது ஏன் இப்படி செய்கிறாய் என கருணாநிதியின் தம்பி காசிநாதன் கேட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கருணாநிதி அருகில் கிடந்த கட்டையை எடுத்து காசிநாதனை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காசிநாதன் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தார். இதையடுத்து கீழப்பழுவூர் போலீஸார் வழக்குப் பதிந்து கருணாநிதியை வியாழக்கிழமை கைது செய்தனர்.