அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே அரசு மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜயங்கொண்டம் அருகே உள்ள நரசிங்கம்பாளையம் கிராமத்தில் அரசு மதுக்கடை திறப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அந்த கிராம மக்கள் ஜயங்கொண்டத்தில் இருந்து நரசிங்கம்பாளையம் வழியாக காட்டுமன்னார்கோயில் செல்லும் அரசுப் பேருந்தை மறித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி காவல் உதவி ஆய்வாளர் வசந்த் மற்றும் போலீஸார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மதுக்கடை வராது என உறுதியளித்ததை அடுத்து, அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.