அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரை தாக்கி, செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளைப் பறித்துச் சென்ற 3 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனர்.
ஜயங்கொண்டம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் அஜித்குமார் (22). இவர் வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் ஆண்டிமடத்திற்கு வந்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக விருத்தாசலம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராங்கியம் வனச்சரகம் அருகே பின்னால் வந்த சூரகுழி கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி மகன் பிரகாஷ் (26), கொளஞ்சி மகன் விக்கி (23), குணசேகரன் மகன் கலையரசன் (23) ஆகியோர் இரும்பு குழாயால் அஜித்குமாரை தாக்கினராம். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தபோது அவரிடமிருந்த செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளைப் பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஆண்டிமடம் காவல் ஆய்வாளர் நித்யா வழக்குப் பதிந்து 3 பேரையும் கைதுசெய்து விசாரித்து வருகிறார்.