அரியலூர் மாவட்டத்தில் வேளாண் துறை சார்பில் 2016-17 ஆம் ஆண்டிற்கான பயிர் விளைச்சல் போட்டியில் அதிக மகசூலை பெற்ற விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை காசோலை வழங்கப்பட்டது.
ஆட்சியரக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் க.லட்சுமிபிரியா பங்கேற்று, கரும்பு பயிரில் முதல் பரிசு பெற்ற வாரணவாசி கிராமத்தைச் சேர்ந்த கி.ராஜேந்திரனுக்கு, ரூ.15,000-க்கான காசோலையினையும், இரண்டாம் பரிசு பெற்ற டி.ரமேஷுக்கு ரூ.10,000-க்கான காசோலையையும், நெல் பயிரில் முதல் பரிசு பெற்ற கு. சின்னப்பாவுக்கு ரூ.15,000-க்கான காசோலையினையும், நெல் பயிரில் இரண்டாம் பரிசு பெற்ற எஸ்.கண்ணனுக்கு ரூ.10,000-க்கான காசோலையினையும் வழங்கினார்.
இதேபோல், நடப்பாண்டிலும் நடைபெறவுள்ள மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டிக்கு நுழைவுக் கட்டணமான ரூ. 100- மற்றும் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டிக்கு நுழைவுக் கட்டணமான ரூ.50- செலுத்தி பயிர் விளைச்சல் போட்டியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் க.லட்சுமி பிரியா தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், வேளாண் இணை இயக்குநர் அய்யாசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) இளங்கோவன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அன்புராஜன், வேளாண் செயற்பொறியாளர் கான் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.