அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள சுள்ளங்குடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் கோவிந்தராஜ்(36). இவர் ஏலாக்குறிச்சி வருவாய் கிராமத்தையும் கவனித்து வருகிறார்.கடந்த 18 ஆம் தேதி ஏலாக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வந்த சுள்ளங்குடி கிராமத்தை சேர்ந்த சாமிநாதன்(65) என்பவர், கிராம நிர்வாக உதவியாளரிடம் ஏதோ கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ், சாமிநாதனிடம் ஏன் இப்படி சண்டை போடுகிறீர் என்று கேட்டாராம்.
இதனால் அவர்கள் இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சாமிநாதன், கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.இதுகுறித்த புகாரின் பேரில் திருமானூர் போலீஸார் வழக்குப் பதிந்து சாமிநாதனை தேடிவருகின்றனர்.