அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக தொல்காப்பிய மன்ற தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கனடா, மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் கங்கைகொண்டசோழபுரத்தில் தொல்காப்பிய மன்றம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
விழாவுக்கு, செம்மொழி மையத்தின் முன்னாள் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். பொறியாளர் கோமகன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். மோகன், முல்லைநாதன், பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்ணாமலை பல்கலைகழக மொழியியல் பேராசிரியர் சண்முகம், பிரான்ஸ் நாட்டின் பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, நெதர்லாந்து பொறியாளர் கோபிரமேஷ், கடலூர் தமிழ்ச்சங்க நிறுவனர் குழந்தைவேலன், பேராசிரியர்கள் சூசை, பத்மநாபன், பிரபாகரன், சிற்றரசு உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர்.
முனைவர் இளங்கோவன் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்ட நோக்கங்கள் பற்றி பேசினார். புலவர்கள் குஞ்சிதபாதம், ஆறுமுகம், திருநாவுக்கரசு, செல்வராசு, சிவபெருமான், ஜெயராமன் , சோழன்குமார், சுப் ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மன்ற பொருப்பாளர்கள் ஸ்ரீகாந்த், செந்தில், கொளஞ்சிநாதன், பாலசுப்ரமணியன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். முன்னதாக இளவரசன் வரவேற்றார். முடிவில் திருவள்ளுவன் நன்றி கூறினார்.