அரியலூர் ஓட்டக்கோயில் அருகேயுள்ள டால்மியா பாரத் சிமென்ட் ஆலையில், சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கனரக வாகன ஓட்டுநர்களுக்கான சிறப்பு பொது மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
டால்மியா சிமென்ட் ஆலைத் தலைவர் விநாயகமூர்த்தி முகாமை குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார். ஏஎஸ்எம் மருத்துவமனை முதன்மை மருத்துவர் அகமது ரபீக் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பங்கேற்று, வாகன ஓட்டுநர்களைப் பரிசோதித்தனர். ரத்த அழுத்தம், மன அழுத்தம், சர்க்கரை, காய்ச்சல், டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருக்கிறதா எனப் பரிசோதித்து அதற்கு தகுந்தாற்போல் மருந்து, மாத்திரைகளை வழங்கினார்.
முகாமில், 200 ஓட்டுநர்கள் பங்கேற்று சிகிச்சை எடுத்துக் கொண்டனர். ஏற்பாடுகளை டால்மியா பாரத் சிமென்ட் ஆலையின் சமூக பொறுப்புணர்வு திட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.