அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விக்கிரமங்கலம் அருகேயுள்ள உடையவர்தீயனூர் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஒருவாரமாக அங்குள்ள டிரான்ஸ்பார்மர் பழுதானதால், முறையாகக் குடிநீரும், மின்சாரமும் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஸ்ரீபுரந்தான் - அரியலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற உடையார்பாளையம் போலீஸார் மற்றும் மின்சார வாரிய அலுவலர் அன்பழகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.