அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய திறனாய்வுத் தேர்வில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் மு.விஜயலட்சுமி பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வில் மாவட்ட மற்றும் மாநில அளவில் தேர்ச்சி பெற்ற ஜயங்கொண்டம் ஒன்றியம், தேவாமங்கலம் (தெற்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த 5 மாணவ, மாணவிகள், இரண்டு ஆண்டுகளாக விடுப்பு எடுக்காத மாணவர்கள் ஆகியோருக்கு ஆட்சியர்
பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.
மேலும் பள்ளி விருதுகளான, மாணவர் புரட்சியாளர் விருது, ஜி.டி.நாயுடு விருது, நாளைய கலாம் விருது, வருங்கால பசுமை காவலன் விருது, அக்னி விருதுகள், சிறந்த ஜே.ஆர்.சி மாணவன் விருது, குழந்தை விஞ்ஞானி விருது ஆகிய விருதுகளை பெற்ற ம.துஷ்யந்த், செ.மணிவாசகன், தே.திலீபன் ஆகியோர்களை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து, இப்பள்ளியில் கடந்த 7 ஆண்டுகளாக எவ்வித விடுப்பும் எடுக்காத பட்டதாரி ஆசிரியர் இலா.செங்குட்டுவன் அவர்களையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் -1, முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி காசியம்மாள் என்பவருக்கு ரூ.50,000-க்கான ஊக்கதொகையினை வழங்கி, 25.3.2018 அன்று ஹரியாணா மாநிலத்தில் மாற்றுத்திறானிகளுக்கான பாரா அத்லடிக் பார்வையற்றோர் பிரிவில் தட்டு எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம், குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்ற சிவகாமி என்பவரையும் பாராட்டினார்.
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சே. தனசேகரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் அ. பூங்கோதை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அ. அனந்தநாராயணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆர். பாலாஜி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.