பள்ளிகளில், இலவசக் கட்டாயக் கல்வி சட்டம் மற்றும் பள்ளி பாதுகாப்பு கொள்கை பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் மு.விஜயலட்சுமி.
பள்ளி கல்வித் துறை சார்பில் தேசிய கட்டட குறியீடு,இலவச கட்டாயக் கல்வி மற்றும் பாதுகாப்பு கொள்கை குறித்து ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அரியலூர் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் தெரிவித்தது:இலவசக் கட்டாய கல்வி மற்றும் பாதுகாப்பு கொள்கை பின்பற்றப்படுகிறதா என சிறுபான்மைப் பள்ளிகளை தவிர அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. 10 பள்ளிகளுக்கு ஒரு குழு வீதம் அமைக்கப்பட்டு மேற்கண்ட பள்ளிகளை அவர்கள் ஆய்வு செய்வர்.ஆய்வு அறிக்கையில் குறைகள் இருந்தால் உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ. புகழேந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.