அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அழகாபுரம் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்தக் கோரி அப்பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிமடம் அருகே அழகாபுரம் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். செந்துறை அடுத்த தளவாய் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளி,உடையார்பாளையம் அடுத்த காரைக்குறிச்சி கிராமத்திலுள்ளஅரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய இரு பள்ளிகளை தரம் உயர்த்தி தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதையறிந்த அழகாபுரம் உயர்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்குச் செல்லாமல், பள்ளி முன்பு கொட்டகை அமைத்து அங்கு தங்களது பெற்றோர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஆண்டிமடம் போலீஸார், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் ஜோதி பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு மதியம் வகுப்பறைக்குச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.