ஜயங்கொண்டம் அருகே மீன்சுருட்டியில் இரண்டு சக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் ஆச்சாள்புரம் கிராமத்திலுள்ள ரோட்டு தெருவைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம்(55) ஓய்வுபெற்ற கிராம உதவியாளர். இவர், தனது மொபட்டில் செவ்வாய்க்கிழமை மீன்சுருட்டி கடைவீதிக்கு சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே திருவாரூர் மாவட்டம் உத்திரங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் வினோத் குமார் (27) ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியது.
இதில், பலத்த காயமடைந்த திருஞான சம்பந்தம், வினோத் குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் வேலுச்சாமி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.