அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா புதன்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கலைச்செல்வி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தொடர்ந்து அவர் சுதந்திர தின உரையாற்றியாற்றி, மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் ஹேமலதா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முடிவில் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
கல்லக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை வளர்மதி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாணவ,மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பள்ளகிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியை மங்கையர்கரசி தேசியக் கொடியை ஏற்றிவைத்து,பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். க. அம்பாபூர் அரசு மேல்நிலப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றினார்.