அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் அருகே ஆடுகளைத் திருடிய 3 பேர் சனிக்கிழமை இரவு பிடிபட்டனர்.
காட்டுப்பிரிங்கியம் கிராமத்தைச் சேர்ந்த மணிவேல்,இளவரசி,இளையபெருமாள் ஆகியோர் சனிக்கிழமை பிற்பகல் கள்ளங்குறிச்சி நீரேற்று நிலையப் பகுதியில் தங்களது ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த நிலையில், டீ குடிக்க அருகிலுள்ள கடைக்குச் சென்று விட்டு திரும்பி வந்தபோது, மர்ம நபர்களை தங்களது ஆடுகளை இருசக்கர வாகனத்தில் ஏற்றுவதைக் கண்டு சத்தம் போட்டனர்.
இதையடுத்து அவர்கள் ஆடுகளுடன் அங்கிருந்து தப்பினர். இதையடுத்து மணிவேல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உடனே அளித்த புகாரின்பேரில் பெரிய நாவலூர் பிரிவுப் பாதை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கயர்லாபாத் போலீஸார் அவ்வழியே 10 ஆடுகளை ஏற்றி வந்த மூவரை மறித்து விசாரித்ததில், மேற்கண்ட நபர்களுக்கு சொந்தமான ஆடுகளை அவர்கள் திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆடுகளை மீட்ட போலீஸார் உரியவர்களிடம் அவற்றை ஒப்படைத்தனர்.
மேலும் ஆடுகள் திருடிய தா.பழூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த இளவரசன் மகன் அஜித்குமார் (21), கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி,கொல்லக்குடி கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் சாமிநாதன் (23), இரும்புலிக்குறிச்சி,காலனித் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் புஷ்பராகர்(21) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.