பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி, அரியலூர் மாவட்டம், திருமழப்பாடியில் விவசாயி செவ்வாய்க்கிழமை பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினார்.
விவசாயிகளின் அனைத்துவிதமான பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய விளைப் பொருள்களுக்கு கட்டுப்படியான விலைகளை வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க. சண்முகசுந்தரம் திருமழப்பாடி கிராமத்தில் தரையில் அமர்ந்து பொதுமக்களிடம் பிச்சைக் கேட்டுப் போராட்டம் நடத்தினார்.
மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளின் நிலை இன்று கவலைக்குரியதாகிவிட்டது. ஒருபுறம் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தற்போது கஜா புயலால் டெல்டா மாவட்ட பகுதிகளில் சொல்ல முடியாத அளவிற்குபாதிப்பைச் சந்தித்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினாலும் மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை. எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இதுபோன்ற போராட்டங்களை நடத்தும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம் என்றார் தங்க. சண்முகசுந்தரம்.