அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே அம்பாபூர் கிராமத்திலுள்ள பெரியநாயகி கோயிலில் வீரபத்திரர் சாமி வெண்கல சிலையை திருடிச் சென்றனர்.
இக்கோயில் அர்ச்சகர் குருசாமி செவ்வாய்க்கிழமை காலை கோயிலை திறந்த போது அங்கிருந்த 1 அடி 5 கிலோ எடை கொண்ட வீரபத்திரர் வெண்கல சிலை திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்,கோயில் நிர்வாகிகளுக்கும்,விக்கிரமங்கலம் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தார்.இதையடுத்து வந்த அரியலூர் டிஎஸ்பி மோகன்தாஸ், உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் கதிவரன்,அரியலூர் காவல் நிலைய ஆய்வாளர் ரவிசக்கரவர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
விக்கிரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். கோயிலில் செவ்வாய்க்கிழமை திருவிழாவுக்காக கொடியேற்றி கங்கனம் கட்ட இருந்தது குறிப்பிடத்தக்கது.