அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
செந்துறை அருகேயுள்ள நல்லாம்பாளையம் மாரியம்மன் கோயிலில், கடந்தாண்டு மே மாதம் 25 ஆம் தேதி நடைபெற்ற தேரோட்டத்தின் போது, அச்சு முறிந்து 5 பேர் காயமடைந்தனர். 60 ஆண்டு பழமை வாய்ந்த இத்தேர் ரூ.3.50 லட்சம் செலவில் புதிய அச்சு, சக்கரங்கள் செய்யப்பட்டு திங்கள்கிழமை தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரின் மீது எழுந்தருளினார். பக்தர்கள் பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் கோயிலில் இருந்து புறப்பட்டு செந்துறை சாலை, திரௌபதியம்மன் கோயில் தெரு, மடத்துத்தெரு, மாரியம்மன் கோயில் தெரு வழியாக நிலையை அடைந்தது. பக்தர்கள் வீடுகள்தோறும் தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.