அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி, மக்கள் சேவை இயக்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன், ரூ.4 லட்சம் செலவில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தில், எந்த பேருந்துகளும் நிற்பதில்லை. இதனால் மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர் என அனைத்து தரப்பினரும் சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து மக்கள் சேவை இயக்கத்தினர் பல முறை ஊராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி, மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க சண்முகசுந்தரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலர் வரப்பிரசாதம், நிர்வாகி மூ.மணியன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே.மகராஜன், மாவட்டச் செயலர் பி.பிச்சைப்பிள்ளை, பாட்டாளி மக்கள் கட்சி தொகுதிச் செயலர் தர்மபிரகாஷ் உள்ளிட்டோர் கீழப்பழுவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த கீழப்பழுவூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட துறையினருடன் பேசி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு, கலைந்து சென்றனர்.