அரியலூர் பெருமாள் தெருவிலுள்ள ஸ்ரீகோதண்டராமசாமி திருக்கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மார்கழி மாதத்தையொட்டி திருப்பாவை பாசுரங்கள் சேவை நடக்கிறது. கூடாரை வெல்லும் திருநாளான வியாழக்கிழமை ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண வைபவம் நடந்தது. முன்னதாக ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து பெண்வீட்டார் சார்பில் சீர்வரிசைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பின்னர் கோயிலில் தசாவதார மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளித்த வெங்கடேசபெருமாள் உற்சவ மூர்த்திக்கும் ஆண்டாள் நாச்சியாருக்கும் வேத பாராயணங்களுடன் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, மகாதீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.