அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டித்தர வலியுறுத்தி மாணவர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உதயநத்தம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்று வட்டார கிராமப்புறங்களை சேர்ந்த 678 மாணவ ,மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி கடந்தாண்டு (2017) மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
ஆனால், தற்போதுவரை இந்தப் பள்ளியில் பிளஸ்1,பிளஸ்2-க்கு என தனி கட்டடங்கள் அமைக்கப்படவில்லையாம். இதனால், பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் பாடங்கள் எடுக்கப்படுவதாக குற்றம் சாட்டிய மாணவர்கள், திறமையான ஆசிரியர்கள் இருந்தும் போதிய வகுப்பறைகள் இல்லாமலிருப்பது கவனக்குறைவை ஏற்படுத்துவதாக கூறி வியாழக்கிழமை பள்ளியின் முன் ஜயங்கொண்டம்-அணைக்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, மாணவர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதி செய்து தரவேண்டும். ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆய்வகம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். தகவலறிந்து வந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தா.பழூர் போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.