அரியலூர் மாவட்ட அரசு விளையாட்டு விடுதியில் கடந்த 3 ஆம் தேதி காணாமல் போன மாணவரை கண்டுபிடித்துத் தருமாறு ஆட்சியர் மு. விஜயலட்சுமியிடம், அவரது பெற்றோர் மற்றும் கிராம மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கூத்தூரை அடுத்த பழுவூர், குடித்தெருவைச் சேர்ந்த ரமேஷ் மகன் மருதுபாண்டியன்(15). ஹாக்கி விளையாட்டில் மாநில அளவில் இரண்டு முறை தங்கம் வென்ற இம்மாணவர், அரியலூர் மாவட்ட அரசு விளையாட்டு விடுதியில் தங்கி, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2.3.2018 அன்றிரவு மாணவர் மருதுபாண்டியன் விடுதியில் இருந்து காணாமல் போனதாக அவரது பெற்றோருக்கு விளையாட்டு விடுதி வார்டன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவர் மருதுபாண்டியன் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவரது பெற்றோர், அரியலூர் காவல் நிலையம், அரியலூர் குற்றவியியல் நீதித்துறை நடுவர் மன்றம் ஆகியவற்றில் கடந்த 3 ஆம் தேதி மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கை இல்லை. இதையடுத்து மாணவர் மருதுபாண்டியனின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்துக்கு திரண்டு வந்து, காணாமல் போன மருதுபாண்டியனைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், அரியலூர் டிஎஸ்பி மோகன்தாஸிடம் மாணவர் மருதுபாண்டியனைக் கண்டுபிடித்துத் தருமாறு உத்தரவிட்டார்.