ஜயங்கொண்டம் கச்சேரி சாலையில் வசிப்பவர் ராமதாஸ் மகன் சம்பத் (45). இவர், தொடர்ந்து சட்ட விரோதமாக வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தார். இவர் மீது ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதியன்று லாட்டரி சீட்டு விற்றதை அடுத்து அவரைப் பிடிக்கச் சென்ற ஜயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளர் தினேஷ் குமாரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றார். இந்நிலையில் ஜயங்கொண்டம் காவல் ஆய்வாளர் வேலுச்சாமி, காவல் துணை கண்காணிப்பாளர் கென்னடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் குமார் ஆகியோர் பரிந்துரையின் பேரில், ஆட்சியர் விஜயலட்சுமி, சம்பத்தை குண்டர் சட்டத்தில் அடைக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். தொடர்ந்து, போலீஸார் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.