மேலராமநல்லூர் - மதனத்தூர் வரையுள்ள கொள்ளிடத்தில் மணல் குவாரிகள் அமைக்க கூடாது என வலியுறுத்தி ஆட்சியர் மு. விஜயலட்சுமியிடம், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
சங்கக் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் தங்க. தர்மராஜன் அளித்த மனு:
தஞ்சை மாவட்டம் வாழ்க்கை கிராமத்திலிருந்து அரியலூர் மாவட்டம் குருவாடி வரையுள்ள கொள்ளிடத்தில் மணல் குவாரிகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன.
எங்களது பகுதிகள் முழுவதும் ஆழ்துளைக் கிணறு அமைத்து நிலத்தடி நீர் மூலமாக விவசாயம் செய்கிறோம். இங்குள்ள கொள்ளிடத்திலிருந்து நதியனூர்,ஆண்டிமடம், ஜயங்கொண்டம், தாபழூர் மற்றும் தஞ்சாவூர், கும்பகோணம்,நாகை,வேதராண்யம் பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுகிறது.
ஆகவே இப்பகுதியில் மணல் குவாரி அமைந்தால் நிலத்தடி நீர் மட்டம் குறைவது மட்டுமல்லாமல் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாமல் போய்விடும். ஆகவே மேற்கண்ட பகுதிகளில் மணல் குவாரிகள் அமைப்பதற்கு அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டிருந்தது.