அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பலத்த மழை பெய்தது.
கத்திரி வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்கிறது. ஆனால், அரியலூர் மாவட்டத்தில் மட்டும் மழை பொழியவில்லை.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பலத்த காற்,று இடி மின்னலுடன் மழை பெய்ததில் பல இடங்களில் மரங்கள்,மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் அரியலூர் நகர் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து திங்கள்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்ததில் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மின் கம்பங்களை சரி செய்த பின்னரே செவ்வாய்க்கிழமை மாலை மின் விநியோகிக்கப்பட்டது.
தொடர்ந்து,செவ்வாய்க்கிழமையும் பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை பெய்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் ஜயங்கொண்டம், செந்துறை,திருமானூர்,மீன்சுருட்டி,ஆண்டிமடம்,தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்தது.