அரியலூர் மாவட்டம் வி. கைகாட்டி அருகே அரசுப் பள்ளியில் வெள்ளிக்கிழமை மதியம் சத்துணவுடன் முட்டை சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 15 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வி.கைகாட்டி அருகே நாகமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு வெள்ளிக்கிழமை மதியம் சத்துணவு சாப்பாட்டுடன் முட்டை வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் ராஜா, அஜய்,சிவராஜ், மாணவிகள் திவ்யா, காவியா, கீதா, சரண்யா, ரஞ்சனி, கார்த்திகா, திவ்யா,கீதாகுமாரி, பவித்ரா, சௌமியா, தேவிகா, தீபிகா ஆகியோருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள் அவர்களை விளாங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், கெட்டுப்போன முட்டையை மாணவர்கள் சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது எனக் கூறி மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.