அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே 6 மாத குழந்தையை கொன்ற தந்தையை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்த காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (27), அனுராதா (24) தம்பதிக்கு ஜெயசுதா, 6 மாதக் குழந்தை ஜெகதீஷா என 2 குழந்தைகள். கடந்த 9 ஆம் தேதி இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த மணிகண்டன் மனைவியிடம் தகராறு செய்து அவரைத் தாக்கினார். இதனால் தனது 6 மாதக் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, ஜெயசுதாவைத் தூக்கிக்கொண்டு வெளியே சென்ற அனுராதா, சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்தபோது குழந்தை இறந்தது கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து குடும்பத்தினர் சேர்ந்து குழந்தையின் சடலத்தை வீட்டின் பின்புறம் புதைத்து விட்டனர்.
இந்நிலையில் சனிக்கிழமை மணிகண்டன் வீட்டுக்கு வந்த மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மூலம் குழந்தை இறந்த விவரம் தெரியவர, அவர்கள் வட்டார மருத்துவ அலுவலர் லட்சுமிதரனிடம் இதுகுறித்து தெரிவித்தனர். இதையடுத்து அவர் அளித்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸார் வழக்குப் பதிந்து குழந்தையின் சடலத்தைத் தோண்டியெடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து தொடர்ந்த விசாரணையில் மணிகண்டன் குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.