அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி டவர் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் மெயின் ரோட்டில் இருந்து ஊருக்கு செல்லும் பாதையில் குடியிருப்புகளுக்கு இடையில் தனியார் இடத்தில் 5ஜி செல்போன் டவர் அமைக்க கடந்த 2 மாதத்திற்கு முன் ஒப்பந்தம் செய்து 20 அடி ஆழக் குழி தோண்டப்பட்டது.
கடந்த 2 மாத காலமாக குழி மூடப்படாததால் கடந்த 1 மாதமாக மழையின்போது மழை நீர் வெளியேறாமல் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதையடுத்து 5ஜி செல்லிடபேசி டவர் அமைப்பதனால் பாதிப்பு ஏற்படக்கூடும் எனக் கூறி இங்கு டவர் அமைக்கக் கூடாது, ஊருக்கு வெளிப்புறம் காட்டுக்குள் எங்கு வேண்டுமானாலும் அமைக்கட்டும், தோண்டிய குழியை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் தொடங்கிய அரை மணி நேரத்தில் மழை தொடங்கி, சுமார் ஒரு மணிநேரம் மழை தொடர்ந்தும் மறியலும் தொடர்ந்தது.
தகவலறிந்த ஜயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளர்கள் அண்ணாதுரை, செல்வம், வளையாபதி மற்றும் வருவாய் ஆய்வாளர் சிவசக்தி, விஏஓ ராஜேந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியலால் ஜயங்கொண்டம் கும்பகோணம் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.