பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய சங்க நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது. கல்லணை முதல் கீழணை வரை மணல் குவாரி அமைக்கக் கூடாது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மூ. மணியன் ,தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க திருமானூர் ஒன்றியத் தலைவர் செந்தில்குமார், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கபிலன், திருமாறன் ஆகிய 5 பேர் கீழப்பழுவூரில் மறியலில் ஈடுபட்டனர். இதில் லாரியை இருசக்கர வாகனத்தின் மூலம் இழுத்து மறியல் செய்ததால் 5 பேரையும் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.