டிஎன்பிஎல் ஆலைக்குள் கழிவுநீர் கால்வாயில் விழுந்து ஆலையின் ஒப்பந்தத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார்.
கரூர் பழமாபுரத்தைச் சேர்ந்தவர் சதாசிவம் (48). கரூர் புகழூர் டிஎன்பிஎல் ஆலையில் பம்ப் ஆபரேட்டர் பிரிவில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில்,வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு வழக்கம்போல்
பணியைத் தொடங்கிய அவர்,மறுநாள் காலை பணி முடியும் நேரத்தில்,தொழிலாளி சேகர் பணியைத் தொடர வந்துள்ளார்.
அப்போது,அங்கு வந்த ஆலையின் மேற்பார்வையாளர் சந்திரசேகர், சதாசிவத்தை மதியம் வரை பணிபுரியட்டும் எனச் சொல்லிச் சென்றாராம். இந்நிலையில், மதியம் பணிக்கு வந்த சேகர், சதாசிவம் காணாமல் அவரைத் தேடியுள்ளார்.
அப்போது அங்குள்ள கழிவுநீர் வாய்க்காலில் சதாசிவம் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த வேலாயுதம்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிந்து மேலும் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.