கரூர் பேருந்து நிலையம் விரைவில் இடமாற்றம் செய்யப்படும் என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர்.
கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம்-மதுரை புறவழிச் சாலைக்கு மேம்பாலம் மற்றும் கரூர்-கோவை சாலையில் திருக்காம்புலியூர் பகுதியில் ஏற்படும் சாலை விபத்தைத் தடுக்கும் வகையில், சாலையை விரிவுபடுத்துவதற்கான ஆயத்தப் பணிகளை அமைச்சர் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கரூரின் முக்கிய சாலையான கன்னியாகுமரி-காஷ்மீர் சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் இருப்பதால், இதை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையின் திட்ட இயக்குநரோடு தள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரூரில் ஈரோடு கோவை சாலை சந்திப்பு பகுதியில் இருந்து திருக்காம்புலியூர் ரவுண்டானா வரை மேம்பாலம் அமைக்கவும், கரூர்-கோவை சாலையை விரிவுபடுத்தவும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கரூர் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது என்றார். ஆய்வின்போது, நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநர் சிவாஜி, நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன், தாந்தோணிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.