நிகழாண்டில் கரூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 883 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்குவதற்காக, ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை வகித்து மேலும் அவர் கூறியது:
கரூர் மாவட்டத்தில் நிகழாண்டில் விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் 32 கிராமங்களில் முதற்கட்டமாக 14 கிராமங்களுக்கு 883 பயனாளிகள் கிராமசபை மூலம் தேர்வு செய்யப்பட்டு ஆடுகள் வழங்கப்பட உள்ளன.
வரும் 15-ம் தேதிமுதல் கிராமசபைக் கூட்டம் நடத்தி, பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். குடும்பத்தின் பெண் உறுப்பினர் மட்டுமே பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்படுவர். ஏழையாக, நிலமற்ற விவசாய தொழிலாளராக, அதே கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
தற்போது மாடு, வெள்ளாடு, செம்மறியாடு வைத்திருக்கக் கூடாது.
பயனாளியோ, அரவது குடும்பத்தைச் சேர்ந்தவரோ மத்திய, மாநில அரசுப் பணியிலோ, பொதுத் துறை, கூட்டுறவுத் துறையிலோ பணிபுரிபவராக இருக்கக் கூடாது. உள்ளாட்சி அமைப்புகளில் பதவி வகிக்கக் கூடாது.
2 ஆண்டுகள் ஆடுகளை வைத்து பராமரிப்பவராக இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 30 சதவீத பயனாளிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். வரும் 23-ம் தேதி அம்மாபட்டி, அணைப்பாளையம், ஆரியூர், அத்திபாளையம், தேவர்மலை, ஆத்தூர் பூலாம்பாளையம், கடம்பங்குறிச்சி ஆகிய 7 பஞ்சாயத்துகளிலும், 24-ம் தேதி காதப்பாறை, கள்ளப்பள்ளி, இரணியமங்கலம், ஆண்டாங்கோயில் மேற்கு, அப்பிப்பாளையம், ஆர்ச்சம்பட்டி, சின்னியம்பாளையம் ஆகிய 7 பஞ்சாயத்துகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது என்றார் ஆட்சியர்.