ஒவ்வொரு நூலகமும் சமுதாயத்தின் தீமைகளை சுட்டெரிக்கும் பிரம்மாஸ்திரமாக திகழ வேண்டும் என்றார் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் சொ. ராமசுப்ரமணியன்.
இந்திய நூலகத் தந்தை முனைவர் சீர்காழி இராமாமிர்த அரங்கநாதன் பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட மைய நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நூலகர் தினவிழாவில் பங்கேற்று, சிறந்த நூலகர்களைப் பாராட்டி, பரிசுகளை வழங்கி மேலும் அவர் பேசியது:
ஒவ்வொரு நூலகமும் சமுதாயத்தின் தீமைகளை சுட்டெரிக்கும் பிரம்மாஸ்திரமாக திகழ வேண்டும். அந்த பிரம்மாஸ்திரத்தை கையாளும் திறன்படைத்தவர்களாக நூலகர்கள் இருக்க வேண்டும். சமுதாய மாற்றத்திற்கான அறிவுப்பெட்டகங்கள் நிறைந்திருக்கும் நூலகங்களில் பணிபுரியும் நூலகர்கள், நூலகத் தந்தை சீர்காழி இராமாமிர்த அரங்கநாதர் ஒரு நூலகராக இருந்து கல்வியில் மென்மேலும் பயின்று பல பட்டங்கள் பெற்று பல்வேறு நூல்களை எழுதி பத்மஸ்ரீ பட்டம் பெற்றதைப்போல, தாங்களும் மென்மேலும் பயின்று பல சாதனைகளை புரியவேண்டும்.
தமிழகத்தில் நீட் தேர்வு மற்றும் போட்டித்தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் நூலகர்களின் கடமை என்றார் அவர்.
முன்னதாக மாவட்ட மைய நூலகத்தின் 3-ம் நிலை நூலகர் ரா.ச. சுகன்யா வரவேற்றார். மாவட்ட நூலக அலுவலர் மா. தனலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட மைய நூலகர் செ.செ.சிவக்குமார் முன்னிலை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் வி.விமலாதித்தன் வாழ்த்திப் பேசினார். காவல்காரன்பட்டி ஊர்புற நூலகர் ப. ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
விழாவில் நூலர்கள், பொதுமக்கள், வாசகர் வட்டத்தினர் உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்றனர்.