தாந்தோணிமலை ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டம், தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளான காக்காவாடி ஊராட்சி அம்மையப்பன்கவுண்டனூர், புத்தாம்பூர் ஊராட்சி வடுகப்பட்டி, ஆண்டாங்கோவில் கிழக்கு ஆகிய ஊராட்சிகளில்
நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
புத்தாம்பூர் ஊராட்சியில் ரூ. 20 லட்சத்தில் நடைபெறும் சமுதாயக் கூடம் கட்டும் பணி, ரூ. 10 லட்சத்தில் ஊரக உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ஆறுசாலை முதல் புத்தாம்பூர் வரை தார்ச்சாலை
அமைக்கும் பணியைப் பார்வையிட்ட அவர் இருமருங்கிலும் சாலையை நேர்த்தியாக அமைக்க உத்தரவிட்டார். ரூ. 20 லட்சத்தில் புத்தாம்பூர் வடுகப்பட்டியில் அம்மா பூங்கா அமைக்கும் பணியைப்
பார்வையிட்டு பூங்கா பணி சீராக நடைபெற ஆலோசனை வழங்கினார். ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் காமராஜநகர் பகுதியில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கான இடத்தை ஆய்வு செய்தார்.
பின்னர் அருகிலுள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தைப் பார்வையிட்டு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள உத்தரவிட்டார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எஸ்.
கவிதா, செயற்பொறியாளர் சடையப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.