உணர்விலும், உடலிலும் கலந்துவிட்ட தமிழ்மொழியின் மாண்பை காக்க வேண்டும் என்றார் கரூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ்.
கரூர், தாந்தோணி அரசு கலைக்கல்லூரியில் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்சிமொழி பயிலரங்கில், சிறந்த தமிழ் மொழி செயலாக்கம் செய்த மாவட்ட நிலை அலுவலர்களுக்கு பரிசு, கேடயங்களை வழங்கியும், தமிழ் "அம்மா' மென்பொருள் சொல்லாக்கம் குறுந்தகட்டினை வெளியிட்டும் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் பேசியதாவது: ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய முதல் குடிமக்களின் தாய்மொழியான தமிழ்மொழியினை அரசு அலுவலகங்களில் செயலாக்க மொழியாகவும், கோப்புகளை கையாளுவதிலும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆண்டுதோறும் தமிழ்வளர்ச்சி துறை சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியரகங்களிலும் ஆட்சிமொழி பயிலங்கரம் நடத்தப்பட்டு வருகிறது. உணர்விலும், உடலிலும் கலந்துவிட்ட தமிழ்மொழியின் மாண்பை உலகறிய செய்யவும், எதிர்கால சந்ததியினருக்கு தமிழ்மொழியின் தொன்மையினை எடுத்துரைக்கவும், நாம் ஒவ்வொரும் முற்படவேண்டும்.
உணர்வை உள்ளபடியே வெளிப்படுத்தக்கூடிய உன்னத மொழியான தமிழை உணர்ந்து, ரசித்து பேச வேண்டும். மனித வாழ்வில் அகம், புறம் என பிரித்துக்காட்டக் கூடிய ஒப்பற்ற இலக்கண, இலக்கிய செறிவுகளை கொண்ட தமிழின் மாண்பை விழிபோல் காக்க வேண்டும் என்றார்.
இந்த பயிலரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி , நாமக்கல் தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் விஜயலட்சுமி , தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி முதல்வர் பாண்டியம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக கரூர் மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் செந்தூர்மருதுபாண்டியன் வரவேற்றார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில் நன்றி கூறினார்.