மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டியில் பங்கேற்க கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 118 மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை சென்னை புறப்பட்டனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் அவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், அண்மையில் கரூர் - மதுரை சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டி நடைபெற்றது. இதில், வெற்றிபெற்ற 18 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 118 பேர் சென்னை சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 8) முதல் 10-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
இதற்காக கரூர் ரயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை ரயிலில் சென்னைக்கு புறப்பட்டனர். அவர்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் தீபம் உ.சங்கர் தலைமையில், துணைத்தலைவர்கள் வி.பழனியப்பன், சாகுல்அமீது, செயலாளர் ஜான்பாஷா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் ஆகியோர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் துணைச் செயலாளர் பிரேம்குமார், மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர் வெற்றிவிநாயகா டி.பிரகாசம் மற்றும் மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.