கூடுதல் வகுப்பறை இன்றி மர நிழலில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும் நிலை உள்ளதால் சோமூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதியினர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து மனுவில் அவர்கள் கூறியிருப்பது:
கரூர் மாவட்டம் சோமூர் ஊராட்சி ஒன்றியத்தில் சோமூர் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நடுநிலைப்பள்ளியாக செயல்பட்டுவந்த இந்தப்பள்ளி கடந்த 2015 ஜனவரியில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இங்கு 82 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 10 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். பள்ளியில் மாணவ, மாணவிகள் கல்வி பயில போதிய கட்டட வசதியின்மையால் தற்போது சோமூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் 5 வகுப்பறைகள் இயங்கி வருகின்றன. இதில் இரு வகுப்பறைகள் பழுதான நிலையில் எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் உள்ளது. இதனால் பெரும்பாலும் மாணவர்கள் வகுப்பறையை விட மர நிழலில்தான் கல்வி பயில்கிறார்கள். இதனால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் மாணவ, மாணவிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேலும் மாணவ, மாணவிகளுக்கு கழிப்பறை வசதியும் கிடையாது.
கூடுதல் வகுப்பறைகள் செயல்படும் ஆரம்பப்பள்ளியில் போதிய இடவசதி உள்ளது. இதில் கழிப்பறை வசதியுடன் கூடிய கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தந்தால் மாணவர்கள் பாதுகாப்புடன் கல்வி பயில்வார்கள். இதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் தெரிவித்துள்ளனர்.