கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளையும் திறந்தவெளியில் மலம்கழித்தல் அற்ற ஊராட்சிகளாக உருவாக்கும் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் தெரிவித்தார்.
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், தும்பிவாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரதி இயக்கம் சார்பில் அண்மையில் நடைபெற்ற திறந்தவெளியில் மலம்கழித்தல் அற்ற சுற்றுச்சூழலை உருவாக்க மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கரூர் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்க ஊரகம் சார்பில், திறந்தவெளியில் மலம்கழித்தல் அற்ற நிலையை உருவாக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 6 ஆண்டுகளில் கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் 96,066 பயனாளிகளுக்கு தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், 67,083 பயனாளிகளுக்கு தனிநபர் இல்ல கழிப்பறை கட்டிக்கொடுக்க கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில் இதுவரை 59 ஊராட்சிகள் திறந்தவெளியில் மலம்கழித்தல் அற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 98 ஊராட்சிகளை அறிவிக்க தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் ஆட்சியர்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கே. கவிதா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் செல்லமுத்து, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் நளினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.