கரூர் மாவட்டம், குளித்தலையில் 812 நபர்களுக்கு ரூ.26.82 கோடியில் வீட்டு மனைப்பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
குளித்தலையில் வருவாய்த் துறையின் சார்பில் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகள் 812 பேருக்கு ரூ.26.82 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனைப் பட்டாக்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்திய திட்டங்களையும், புதிய திட்டங்களையும் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
கடந்த ஐந்தாண்டுகளில் வருவாய்த்துறை சார்பில் 5,241 பேருக்கு ரூ.55.35 கோடி மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. கரூர் நகரில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து பட்டா கோரி விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் 27 ஆம் தேதி திருமாநிலையூர் பகுதியைச் சேர்ந்த 638 பயனாளிகளுக்கு ரூ.15.24 கோடி மதிப்பில் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, கடந்த 4 ஆம் தேதி செல்வாநகர் பகுதியில் 121 நபர்களுக்கு ரூ.3.2 கோடி மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் கிருணராயபுரம் எம்எல்ஏ கீதா மணிவண்ணன், குளித்தலை எம்எல்ஏ ராமர், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், கோட்டாட்சியர் சக்திவேல், வட்டாடசியர் அருள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் நெடுஞ்செழியன், ஏ.ஆர்.காளியப்பன், விசிகே. ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.