கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள், நீர்நிலைகளை புனரமைக்கும் பணிகளின் மேம்பாடு குறித்தும் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி, நத்தபட்டியில் ரூ.11.08 லட்சம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தின் கீழ் குளம் சீரமைத்து தூர்வாரும் பணி, காணியாளம்பட்டியில், புதுக்குளம் ரூ.19.45 லட்சம் மதிப்பில் தாய் திட்டத்தின் கீழ் சீமைக்கருவேல மரங்களை அகற்றி குளத்தை தூய்மைப்படுத்தும் பணி, பண்ணபட்டி பஞ்சாயத்துக்குள்பட்ட பழனிசெட்டியூர் பகுதியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி குளத்தை தூய்மைப்படுத்தும் பணி ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
மேலும், கோவில்பட்டி பகுதியில் ரூ.15.07 லட்சம் மதிப்பில் முடிவுற்ற தார்ச்சாலை பணியைப் பார்வையிட்டு சாலையின் தரத்தை உறுதி செய்தார்.
அப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கம், கால்நடைகளுக்கு அரசு மானியத்தில் மாட்டுக்கொட்டகை அமைத்துக் கொடுக்க கேட்டுக்கொண்டார்.
இதையொட்டி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். நத்தப்பட்டி பகுதியில் 3 பயனாளிகள் தலா ரூ.12,000 மதிப்பில் தனிநபர் இல்லக்கழிப்பறை கட்டித்தரப்பட்டிருப்பதைப் பார்வையிட்டு அதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, செயற்பொறியாளர் சடையப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.