ராஜிவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஆட்சியர் கு. காவிந்தராஜ் பேசுகையில், மறைந்த பிரதமர் ராஜிவ்காந்தியின் நினைவு நாள் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்படுகிறது என்றார்.
பின்னர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம் என்ற உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் படிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) தன்ராஜ் உள்பட அனைத்து அரசு அலுவலர்களும் கலந்துகொண்டனர்.