கரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மைலம்பட்டியில் 50.50 மீ.மீ. மழை பதிவானது.
தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை கை கொடுக்காததால் எந்த ஆண்டும் இல்லாத வகையில் நிகழாண்டில் கடும் வறட்சியை சந்தித்துள்ளது.
இந்நிலையில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
கரூர் பரமத்தியில் 109 டிகிரியையும் வெப்பம் தாண்டியுள்ளது. இந்நிலையில் கோடை மழை பெய்து பூமியை குளிர்விக்காதா என மக்கள் ஏங்கிக்கொண்டிருந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் கோடையின் வெப்பம் ஓரளவுக்கு தணிந்துள்ளது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பெய்த மழையின் அளவு (மி.மீட்டரில்):
கரூர்- 16.30, அணைப்பாளையம்- 8.20, கே.பரமத்தி- 14, குளித்தலை- 7, தோகைமலை- 5, கிருஷ்ணராயபுரம்- 2, மாயனூர்- 10, பஞ்சப்பட்டி- 38.60, கடவூர்- 18.20, பாலவிடுதி- 27.20, மைலம்பட்டி- 50.50. என மொத்தம் 197 மி.மீ.மழை பதிவானது.