தமிழக அரசின் கோரிக்கைகளில் விதிகளுக்குள்பட்டே வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என மத்திய இணை மைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கரூரில் புதன்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற வாக்குச்சாவடி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலையில் கோடங்கிப்பட்டியில் வியாழக்கிழமை சுரங்கப்பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தேசிய நெடுஞ்சாலை 67-இல் கரூர்-திருச்சி புறவழிச்சாலையில் ஈசநத்தம் பிரிவு பகுதியை மக்கள் பாதுகாப்பாக கடப்பதற்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வு செய்யப்படுகிறது.
அதிமுக உள்கட்சி விவகாரங்களில் பிரதமர் நரேந்திரமோடிக்கோ, அமித்ஷாவுக்கோ எந்த சம்பந்தமும் கிடையாது.
பிரதமர் நரேந்திரமோடியை எடப்பாடி பழனிசாமி முதல்வர் என்ற முறையில் சந்தித்தார்.
அப்போது, வறட்சி நிவாரணமாக ரூ.40,000 கோடி மற்றும் பல்வேறு கோரிக்கைகளுக்காக ரூ.71,000 கோடி வேண்டும் என கோரியுள்ளார்.
இது நடைமுறைக்கு சாத்தியமற்றது. விதிகளுக்குள்பட்டே வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என்றார். அதைத் தொடர்ந்து கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வீரராக்கியம், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மண்மங்கலம் உள்ளிட்ட இடங்களிலும் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் விபத்துகளை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்தார். அப்போது,
கரூர் கோட்டாட்சியர் ஜெ.பாலசுப்ரமணியம், கரூர் வட்டாட்சியர் சக்திவேல், பாஜக கோட்ட இணை பொறுப்பாளர் கே. சிவசாமி, கரூர் மாவட்ட தலைவர் முருகானந்தம், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.