கரூரில் மாவட்ட அளவிலான ஜூனியர் டென்னிஸ் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
கரூர் வின்னர்ஸ் டென்னிஸ் அகாதெமி சார்பில் வெள்ளிக்கிழமை முதல் வரும் 28-ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ள இப்போட்டியை தொழில் அதிபர்கள் வெங்கடாசலம், பார்வதி, காவல் துணைக் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல்பாரி ஆகியோர் தொடக்கிவைத்தனர்.
முன்னதாக அகாதெமி தலைவர்கள் மோகன், சிங்காரவேலு ஆகியோர் வரவேற்றனர். இதில் 10, 12, 14, 16 வயதுக்குட்பட்ட மாணவர்களும், 16 வயதுக்குட்பட்ட மாணவிகளும் பங்கேற்று விளையாடுகிறார்கள். மேலும் ஆண்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளும் நடைபெற உள்ளன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் ரூ. 1.2 லட்சம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.