கரூர் வெங்கமேட்டில் இரு அரசு மதுபானக்கடைகளை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் வெங்கமேட்டை அடுத்த அருகம்பாளையத்தில் புதிதாக அரசு மதுக்கடை அமைப்பதற்காக கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்பட இருந்தது. இதுகுறித்து அறிந்த அப்பகுதியினர் கடந்த 3-ஆம் தேதி அந்த இடத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் புதிதாக அங்கு அரசு மதுக்கடை திறக்கப்படாது என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்நிலையில் அந்த இடத்தில் புதிதாக அரசுமதுக்கடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதியினர் உடனே கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த வெங்கமேடு போலீஸார் மற்றும் அரசுமதுக்கடை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கடை இனி திறக்கப்படாது என உறுதியளித்து கடையை மூடினர். இதையடுத்து மக்கள் போராட்டதை கைவிட்டு கலைந்துசென்றனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு அங்கிருந்த கலைந்த சென்ற மக்கள் காமதேனு நகரில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அரசு மதுக்கடையையும் உடனே மூடக்கோரி கடையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெங்கமேடு போலீஸார் மற்றும் அதிகாரிகள் இது ஏற்கெனவே செயல்பட்டு வரும் கடை என்பதால் இதுகுறித்து ஆட்சியரிடம் மனு அளிக்க அறிவுறுத்தியதால் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.