கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பாதுகாப்புக்கு வந்த வாகனம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் முதியவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, எலவனூர், க.பரமத்தி மற்றும் வேலாயுதம்பாளையம் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற மாணவ,மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளப்பட்டி பள்ளியில் மடிக்கணினிகளை வழங்கிவிட்டு, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அரவக்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அரவக்குறிச்சி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்த போது, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் பாதுகாப்புக்காக வந்த பாதுகாப்பு வாகனம் முன்னே சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் அந்த நபர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது இறந்த நபர், சேந்தமங்கலம் கிழக்கு ஊராட்சிக்குள்பட்ட குறிக்காரன்வலசை சேர்ந்த கூலித் தொழிலாளி லட்சுமணன் (65) என்பது தெரிய வந்தது. இந்த விபத்தில் அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் சேதமடைந்தது. விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.