இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைப்பது உறுதி என்றார் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு ஜெயலலிதா வழியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதி.
அதிகப்படியான சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆதரவு எங்களுக்குத்தான் உள்ளது.
சிலர் வேண்டுமென்றே எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கக்கூடாது என முட்டுக்கட்டை போடுகிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணம் ஈடேறாது என்றார் தம்பிதுரை. பேட்டியின்போது, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.