மாநில அளவில் ஒன்றியத் தலைநகரங்களில் நவம்பர் 27 ஆம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து பட்டை நாமத்துடன் போராட்டம் நடத்துவதென சத்துணவு ஓய்வூதியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
8- ஆவது ஊதியக் குழு மாற்றத்தில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியின்படி குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்காதது, ஓய்வூதியப் பலன்கள் வழங்காதது, பொங்கல் போனஸ் வழங்கக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 27 ஆம் தேதி ஒன்றியத் தலைநகரங்களில் பட்டை நாமத்துடன் போராட்டத்தில் ஈடுபடுவது, மாவட்டத் தலைநகரங்களில் ஜனவரி 4 ஆம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து தர்னாவில் ஈடுபடுவது என்பனஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலத் தலைவர் ஆர்.செல்வராஜ் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். பொதுச் செயலர் மாயமலை வேலை அறிக்கையையும், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி நிதி நிலை அறிக்கையைச் சமர்ப்பித்தும் பேசினர்.